மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
புதிதாக தெரிவான தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் விரைவில் ஆராயுமாறும் பிரதமர் கூறியுள்ளார்.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை பழைய முறையின் கீழ் நடத்தி, அடுத்த மாகாண சபைத் தேர்தலை புதிய முறையில் நடத்துவது எளிதாக இருக்கும் என ஆணைக்குழு உறுப்பினர்கள், பிரதமரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
எனினும், இந்த விடயம் குறித்து சபாநாயகருடன் கலந்துரையாடி தீர்மானமொன்றை எடுக்குமாறும் பிரதமர் மகிந்த, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



















