எதிர்வரும் 26ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் சுற்றுலாப்பயணிகளுக்காகத் திறக்கப்படுகின்றது.
எனினும், பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட ஏனைய விமான நிலையங்கள் திறப்பு தொடர்பில் அடுத்த மாத நடுப்பகுதியிலேயே ஆராயப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலையடுத்து பலாலி விமான நிலையமும் தற்காலிமாக மூடப்பட்டது.எனினும், கடந்த நல்லாட்சி அரசு திறந்து வைத்த இந்த விமான நிலையத்தை ராஜபக்ஷஅரசு ஒரேயடியாக மூடி வைக்கத் திட்டமிட்டுள்ளது என்ற ஒரு செய்தி ஊடகங்களில் வெளியாகியிருந்தது.
அத்துடன் பலாலி விமான நிலைய சேவையை உள்ளூர் சேவையாக மட்டுப்படுத்திக் கொண்டு,அம்பாந்தோட்டையிலுள்ள மத்தள விமான நிலையத்தை (மஹிந்த ராஜபக்ச விமான நிலையம்)சர்வதேச தரம் வாய்ந்த விமான நிலையமாக விரிவாக்க அரசு இரகசிய நடவடிக்கையில் ஈடுபடுகின்றது என்ற செய்தியும் வெளியாகியிருந்தது.
மேற்படி செய்திகள் தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“ஏற்கனவே இயங்கிக் கொண்டிருந்த கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் எதிர்வரும்26ஆம் திகதி சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கப்படவுள்ளது.
பலாலியில்அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட ஏனைய விமான நிலையங்கள் இப்போது திறக்கப்படாது.
அவை திறக்கப்படுவது தொடர்பில் அடுத்த மாத நடுப்பகுதியில்தான் ஆராயப்படும்” என்று அமைச்சர் அதற்குப் பதிலளித்தார்.
ஊடகங்களில் வெளிவந்திருந்த செய்தியை மறுதலிக்காமல் மேற்படி பதிலையே அமைச்சர் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


















