சுகாதார விதிமுறைகளை மீறி வடக்கின் பல இடங்களிலும் சுகாதாரத்துறையினர் வருட இறுதி ஒன்றுகூடல்கள், களியாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுகாதார விதிமுறைகளை குறிப்பிட்டு, ஏனைய துறை சார்ந்தவர்களையும், பொதுமக்களையும் ஒன்றுகூட விடாமல் தடுக்கும் சுகாதாரத்துறையினர், தமக்கு விதிமுறைகள் எவையும் பொருந்தாது என்ற பாணியில் வருட இறுதி ஒன்றுகூடல்கள், களியாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த ஒரு சில நாட்களில் வடக்கில் முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் சுகாதாரத்துறையினரின் வருட இறுதி களியாட்டம், விருந்து இடம்பெற்றது.
இதில் சுகாதார விதிமுறைகளை மீறிய பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
வவுனியா, ஓவியா விடுதியில் நேற்றிரவு சுகாதாரத்துறையினர் ஒன்றுகூடினர். இதில் ஒன்றுகூட அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமானவர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேபோல, முல்லைத்தீவிலும் வருட இறுதி ஒன்றுகூடல் இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை நலன்புரி அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்றதாக குறிப்பிடப்படும் வருட இறுதி ஒன்றுகூடல், கடந்த 20ஆம் திகதி சிலாவத்தையில் அமைந்துள்ள அவலோன் resort இல் இடம்பெற்றது.
மாவட்ட வைத்தியசாலையின் சுகாதாத்துறையினர், கரைத்துறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்கள் என 100 இற்க்கும் அதிகமானவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இதேபோல, மன்னார் மாவட்டத்திலும் வருட இறுதி ஒன்றுகூடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா அபாயத்தையடுத்து, வருட இறுதி ஒன்றுகூடல்களை நடத்த வேண்டாம், பண்டிகைகளில் மக்கள் கூட வேண்டாம் என சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதற்கான அறிவித்தல் விடுத்திருந்தார். பிராந்திய மட்டத்திலும் சுகாதார அதிகாரிகள் இந்த அறிவித்தலை விடுத்துள்ளனர். எனினும், தமது அறிவிப்பை தாமே கணக்கிலெடுக்காமல் சுகாதாரத்துறையினர் வருட இறுதி ஒன்றுகூடல்களில் ஈடுபடுவது, வடக்கில் சுகாதார விதிமுறைகளை இறுக்கமாக நடைமுறைப்படுத்த முடியாத சூழலை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
சுகாதார காரணங்களை குறிப்பிட்டு, நாளாந்த உழைப்பாளிகளை தனிமைப்படுத்தும் சுகாதாரத்துறையினர், தாமே விதிமீறி ஈடுபடும் இந்த பொறுப்பற்ற நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.