கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா தொற்று இனங்காணப்பட்டதையடுத்து கிண்ணியா பிரதேசத்தில் உள்ள கடைகளை அடைக்குமாறு பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனி நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதற்கமைய இன்றைய தினம் கிண்ணியா பிரதேச செயலாளர் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று திறந்திருந்த கடைகளை மூடுமாறு அறிவுறுத்தல் விடுத்துள்ளார். மேலும் சட்டத்தை மீறி செயற்படுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன்போது அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏனைய பிரதேசங்களில் அத்தியவசிய பொருட்கள் தவிர்ந்த ஏனைய கடைகள் அனைத்தும் பூட்டுவதற்கான உத்தரவு விடுக்கப்பட்டிருந்தது. கிண்ணியா பிரதேசத்தில் கொரோனா தொற்று மேலும் ஏற்படாத வகையில் மக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அத்தியவசிய தேவைகளுக்கு மட்டும் வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரம் வெளியில் செல்லுமாறும் பிரதேச செயலாளர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.