நல்லாட்சி அரசின் காலத்தில் இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிற்கான இணை அனுசரணையில் இருந்து எமது அரசு வெளியேறழவிட்டது. எனவே இம்முறை நமது நாடு மீது புதிய பிரேரணை கொண்டுவரப்பட்டாலும் அதையும் வலுவிழக்கச் செய்வோம் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் மார்ச்சில் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைகள் சபையில் அமர்வை முன்னிலைப்படுத்தி இங்கு எதிர்க்கட்சியினர் தமது சுயலாப அரசியல் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த நல்லாட்சி அரசின் காலத்தில் இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட ஜெனீவாத் தீர்மானங்களிற்கான இணை அனுசரணையில் இருந்து எமது அரசு வெளியேறி விட்டது. எனவே இம்முறை எமது நாடு மீது புதிய பிரேரணை கொண்டுவரப்பட்டாலும் அதையும் வலுவிழக்கச் செய்வோம். எதிர்க்கட்சியினரின் ஜெனீவாப் பரப்புரை தொடர்பில் நாம் அலட்டிக் கொள்ளக்கூடாது.
கொரோனாவை ஒழிப்பதில் தேசிய செயற்பாட்டுத் மையத்தினர் முழுமூச்சுடன் செயல்பட்டு வருகின்றனர். முழு நாட்டையும் முடக்கி நாட்டு மக்களின் வயிற்றில் அடிக்காமல் தொற்று பரவும் அபாயமுள்ள பகுதிகளை அடையாளம் கண்டு அந்தப் பகுதிகளை முடக்கி, தொற்றை படிப்படியாக குறைத்து வருகின்றனர்.
பிரிட்டனில் பரவும் புதிய வைரஸ், இலங்கையிலும் பரவக் கூடாது என்பதற்காகவே பிரிட்டனில் இருந்து இங்கு பயணிகள் வருவதை தற்காலிகமாக தடை செய்துள்ளோம். அதேவேளை, வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே 2021இன் ஆரம்பத்திலேயே இலங்கையில் கொரோனாவிற்கு முடிவு கட்டிவிடலாம் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும் என்றார்.



















