கிளிநொச்சி இரணைமடு குளத்தின் மேலும் இரண்டு வான்கதவுகள் திறக்கப்படுவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே படிப்படியாக வான்கதவுகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இரணைமடு குளத்தின் 6 வான்கதவுகள் தற்போது வரை திறக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தாழ்நிலப்பகுதி மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட இடர்முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
36 அடி கொள்ளளவு கொண்ட இரணைமடு குளமானது அடைவுமட்டத்தை அடைந்து 2.5 அங்குலம் வான்பாய்ந்து வந்தது.
இந்த நிலையில் மேலும் நீர் வரத்து அதிகரித்தமையால் ஆரம்பத்தில் வான் கதவுகள் 6 அங்குலம் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் மேலும் அளவு மட்டத்தில் அதிகரிப்பு செய்யவோ அல்லது மேலும் கதவுகளை திறப்பது தொடர்பிலோ தீர்மானிக்கப்படும் எனவும், இவ்விடயம் தொடர்பில் முழுமையான கண்காணிப்பு இடம்பெற்று வருவதாகவும் நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை வெள்ள அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கைகள் ஏற்கனவே தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வந்த நிலையில் பன்னங்கண்டி, முரசுமோட்டை, பரந்தன், ஊரியான், கண்டாவளை, உமையாள்பரம் உள்ளிட்ட பகுதி மக்களை அவதானமாக செயற்படுமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை இன்று காலை 6 மணி வாசிப்பின்படி கிளிநொச்சியின் நீர்பாசன குளங்களான கல்மடுகுளம் 4 அங்குலமும், பிரமந்தனாறு குளம் 4 அங்குலமும், கனகாம்பிகை குளம் 6 அங்குலமும் வான் பாய்ந்து வருவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.
மேலும் இன்று காலை 7 மணி வாசிப்பின் படி அக்கராயன்குளம் அங்குலமும், கரியாலை நாகபடுவான்குளம் 6 அங்குலமும், புதுமுறிப்பு குளம் 3 அங்குலமும், குடமுருட்டி குளம் 6 அங்குலமும், வன்னேரிக்குளம் 3 அங்குலமும் வான் பாய்ந்து வருவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.
குறித்த குளங்களை அண்மித்த தாழ்நில பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறும், குளங்களை பார்வையிடுதல், நீராடுதல் மற்றும் மீனபிடிப்பதில் ஈடுபடுதல் ஆகியவற்றை தவிர்க்குமாறும் மாவட்ட இடர்முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
தொடர்ச்சியான மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் மக்கள் அவதானமாக செயற்படுமாறும், இடர் ஏற்படும் சந்தர்ப்பங்களில் கிராம சேவையாளர் அல்லது இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் உதவியை பெற்றுக் கொள்ளமாறும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.