“நான் நலமுடன் இருக்கின்றேன். வைத்தியசாலையிலிருந்து இன்று மாலை வீடு திரும்பிவிட்டேன்.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் இன்றிரவு தெரிவித்துள்ளார்.
மூத்த அரசியல் தலைவரான இரா.சம்பந்தன், புதுவருடத் தினத்துக்கு முதல் நாள் இரவு- அதாவது கடந்த வியாழக்கிழமை இரவு உடல் உபாதைகள் காரணமாகக் கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்.
புதுவருடத் தினமான வெள்ளிக்கிழமை இரவு உடல் நிலைமை ஸ்திரமாக இருந்தமையால் சாதாரண கண்காணிப்பு விடுதிக்கு அவர் மாற்றப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், இன்று சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் அவர் கொழும்பிலுள்ள வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.
இதையறிந்து இன்றிரவு தொலைபேசியூடாக ஊடகவியலாளர்கள் அவரைத் தொடர்பு கொண்டபோது,”நான் நலமுடன் இருக்கின்றேன். வைத்தியசாலையிலிருந்து இன்று மாலை வீடு திரும்பிவிட்டேன்” என்று பதிலளித்துள்ளார்.


















