சீனாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான டொனால்ட் ட்ரம்பின் பனிப்போர் கொள்கையை ஜோ பைடன், முடிவுக்கு கொண்டு வந்து இருநாடுகள் இடையிலான இயல்பான உறவை மீட்டெடுப்பார் என சீனா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபரம் ட்ரம்பின் 4 ஆண்டு பதவி காலத்தில் அமெரிக்கா- சீனா இடையிலான உறவு பெரும் பனிப்போராக உருவெடுத்திருந்தது.
வர்த்தகம், மனித உரிமை மீறல், கொரோனா வைரஸ் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் பனிப்போர் நிலவிவருகிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருந்த சூழலில் ட்ரம்ப் சீனா மீது பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.
கொரோனா வைரஸ் சீனாவால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்றும் தங்கள் நாட்டை நாசப்படுத்தும் வேலையில் சீனா செயல்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் வருகிற 20ஆம் திகதி பதவியேற்கிறார். அவர் பதவிக்கு வந்ததும் ட்ரம்பின் பனிப்போர் கொள்கையை முடிவுக்கு கொண்டு வந்து இருநாடுகள் இடையிலான இயல்பான உறவை மீட்டெடுப்பார் என சீனா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி பேசியுள்ளதாவது,
அண்மைய ஆண்டுகளில் அமெரிக்கா- சீனா உறவுகள் முன்னோடி இல்லாத வகையில் சிக்கல்களில் சிக்கியுள்ளன. அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தால் இந்த நிலை மாறும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.
புதிய நிர்வாகம் விவேகமான அணுகுமுறைக்கு திரும்பும்; சீனாவுடனான உரையாடலை மீண்டும் தொடங்கும்; இருதரப்பு உறவுகளுக்கு இயல்பு நிலையை மீட்டெடுக்கும்; ஒத்துழைப்பை மீண்டும் தொடங்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.




















