சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீலங்கா துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொது செயலாளர் வைகோ உள்ளிட்ட 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளியவாய்க்கால் நினைவுத் துாபி இடிக்கப்பட்டதை கண்டித்து இடம்பெற்ற போராட்டத்திலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் துாபி கடந்த 8ம் திகதி இரவோடு இரவாக இடிக்கப்பட்டது.
நினைவுத் துாபி இடிக்கப்பட்டதற்கு தமிழக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், இலங்கையில் இறுதிக்கட்ட யுத்ததின் போது உயிர்நீத்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் துாபி இடிக்கப்பட்டதை கண்டித்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீலங்கா துணை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொது செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்றது.
யோலா கல்லூரி அருகே வைகோ தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அங்கிருந்து அவர்கள் பேரணியாக, இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.