மக்கள் வாழ்க்கையுடன் விளையாடிய பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஏற்பட்ட தலைவிதியைப் பார்த்திருப்பீர்கள். பயங்கரவாதத்தையோ தீவிரவாதத்தையோ உருவாக்க முயற்சிக்கும் எந்தவொரு நபருக்கோ குழுக்களுக்கோ அதே நிலைமையை ஏற்படுத்துவதற்கு இந்த அரசாங்கம் பின்வாங்காது எனத் தெரிவித்துள்ளார் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வி சேவை இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த.
கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் சடலங்களின் இறுதிச்சடங்கு பற்றி தீர்மானிக்கும் பொறுப்பை, சுகாதார பிரிவின் நிபுணர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
களுத்துறையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு அவர், தெரிவித்தார்.
சிங்கங்களாக வேடமிட்டிருக்கும் அரசியல் நரிகளால், மக்களைக் குழப்பமுடியாது. அசாத்சாலி, சிங்கம்போல வேடமிட்டிருக்கும் நரி. கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை, அடக்கம் செய்வதா, தகனம் செய்வதா என்ற விடயத்திலிருந்து அரசியல்வாதிகளை ஒதுக்க வேண்டும்.
சுகாதார பிரிவினரின் தீர்மானத்தை நாட்டுப் பிரஜைகள் என்றவகையில் நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த அவர், அசாத் சாலியை விட திமிர்பிடித்து இருந்தவர்கள் அழிக்கப்பட்டு உள்ளனர் என்றார்.
நாட்டின் பொருளாதாரத்தில் மட்டுமன்றி, மக்கள் வாழ்க்கையுடன் விளையாடிய பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஏற்பட்ட தலைவிதியைப் பார்த்திருப்பீர்கள் எனத் தெரிவித்த அவர், பயங்கரவாதத்தையோ தீவிரவாதத்தையோ உருவாக்க முயற்சிக்கும் எந்தவொரு நபருக்கோ குழுக்களுக்கோ அதே நிலைமையை ஏற்படுத்துவதற்கு இந்த அரசாங்கம் பின்வாங்காது என்றார்.
பலமிக்கம் தலைமைத்துவம் நாட்டை ஆட்சி செய்கிறது. ஆகையால், எதிர்க்கட்சி உள்ளிட்ட அரசியல்வாதிகள் மிகவும் புத்திசாதுரியத்துடன் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்த அவர், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் போது, அன்று எதிர்க்கட்சியாகச் செயற்பட்ட நாம், அனைத்து மதத் தலைவர்களையும் ஒன்றிணைத்து, கலவரம் ஏற்படாத வகையில், சகல இன மக்களையும் வழிநடத்தி, பொறுப்புடன் செயற்பட்டோம் என்றார்.