கொரோனா காரணமாக மரணித்த ஒருவரின் சடலமொன்றில் 29 நாட்களுக்குப் பின் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின்போது சடலத்தில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இரண்டாவது தடவையாகவும் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
தம்புள்ளை பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்திருந்தார்.
ஆனால், சடலத்தை பொறுப்பேற்பதற்கு அவரது உறவினர்கள் முன்வரவில்லை. தொடர்ந்தும் அவரது சடலம் குளிரூட்டப்பட்ட சவச்சாலையில் வைக்கப்பட்டிருந்தது.
29 நாட்கள் அந்த சடலம் அங்கேயே வைக்கப்பட்டிருந்த நிலையில், சடலத்தைத் தகனம் செய்ய சுகாதாரப் பணியாளர்கள் பொறுப்பேற்றபோது பி.சி.ஆர் பரிசோதனையொன்றை நடத்தியுள்ளனர். இதன்போதே அந்த சடலத்தில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், சுகாதார அமைச்சு இந்த தகவலை இதுவரை உறுதிப்படுத்தவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.