திருகோணமலை மாவட்டத்தில் 22 புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை 4 மணியளவில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிண்ணியாவில் கடந்த 12 மணித்தியாலயத்தில் புதிய கொரோனா தொற்றாளர் 9 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாரம் அடையாளம் காணப்பட்ட புதிய கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 48 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று சிவப்பு வலயத்தில் திருகோணமலை மற்றும் கிண்ணியா முன்னிலையில் உள்ளது.
அத்துடன் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் மொத்த கொரோனா தொற்றாளர் 69 பேர் எனவும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறிஞ்சாகேணியில் 3 பேர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் இன்று (17 ஆம் திகதி) காலை முதல் மாலை 4.30 மணிவரை திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 156 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை உப்புவெளி சுகாதார பிரிவிலுள்ள பாலையூற்று பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி, பிள்ளை ஆகிய மூவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக மாணவன் ஒருவனுக்கு பெறப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையின் படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சேருவில பிரதேசத்தில் கொட்பே மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நபர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் கூறியுள்ளார்.
பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா பரவலைக் கட்டுப் படுத்த முடியும் எனவும், திருமணம் உள்ளிட்ட வேறு ஒன்று கூடல்களை இயன்றவரை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.