நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சரியான நேரத்தில் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தவிசாளர் வஜிர அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க எப்போது நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்யும் வரை வேறு யாரும் அந்த வெற்றிடத்தை பூர்த்தி செய்ய மாட்டார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,
“அடுத்த ஆண்டு ஆகஸ்டில் இலங்கையின் நிலைமை என்ன என்பதை கட்சி கவனிக்கும், பின்னர் தேசிய பட்டியல் இடத்தைப் பற்றிய இறுதி முடிவு கட்சித் தலைவரால் எடுக்கப்படும்.
தற்போது நாடாளுமன்றத்திற்குச் செல்ல நேரம் சரியாக இல்லை என ரணில் எங்களிடம் கூறியுள்ளார். எனவே தற்காலிக அடிப்படையில் கூட வேறு யாரும் நாடாளுமன்றத்திற்குச் செல்ல வாய்ப்பில்லை.
எவ்வாறாயினும், அரசியலமைப்பின் படி தேசிய பட்டியல் இடத்தைத் வெற்றிடமாக வைப்பதற்கான ஏற்பாடு உள்ளது, ”என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பதவியேற்க தகுதியுடையவர் என்று வேறு யாராவது கூறினால், அந்த நபர் அரசியல் புரிந்துணர்வு இல்லாதவர் என அவர் மேலும் கூறியுள்ளார்.