முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காட்டுப்பகுதிக்குள் அழைத்து செல்லப்பட்டு குடும்பம் நடத்திய பின்னர் கைவிடப்பட்ட யுவதி, தன்னை ஏமாற்றிய காதலன் மீது புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
அவரது கைகளில் கூரிய பொருட்களால் கீறப்பட்ட காயங்கள் காணப்பட்டன. காட்டுக்குள் அழைத்துச் சென்ற காமுகனே அந்த காயத்தை ஏற்படுத்தியதாக யுவதி முறையிட்டுள்ளார்.
இந்த அதிர்ச்சி சம்பவம் இன்று (20) காலை இடம்பெற்றது.
கிளிநொச்சியை சேர்ந்த 22 வயதான யுவதியொருவரே இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளார்.
நடமாடும் பொருள் விற்பனை நிறுவனமொன்றில் பணியாற்றிய நிலையில், கூடவே பணியாற்றிய புதுக்குடியிருப்பு வாலிபன் ஒருவனும், யுவதியும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் காதலன் கொழும்பிற்கு சென்றிருந்தார்.
சிறிது நாளில் யுவதியின் குடும்பத்தினருக்கு தெரியாமல் அவரை கொழும்பிற்கு அழைத்து சென்று குடும்பம் நடத்தியுள்ளார்.
யுவதியின் பெற்றோர் பல இடங்களிலும் தேடி, பொலிசில் முறையிட்டு பின்னர் யுவதி மீட்கப்பட்டார்.
இந்த நிலையில், சில நாட்களின் முன்னர் குடும்பத்தினருக்கு தெரியாமல் காதலனுடன் ஓடிப்போன யுவதி, புதுக்குடியிருப்பிலுள்ள வீடொன்றில் தங்கியுள்ளனர். பின்னர், புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள காடொன்றிற்கு தன்னை அழைத்து சென்று தங்கியிருந்ததாக யுவதி முறைப்பாட்டில் தெரிவித்தார்.
பின்னர், யுவதியை அநாதரவாக கைவிட்டு இளைஞன் தலைமறைவாகி விட்டார்.
கூரிய பொருட்களால் தனது கைகளில் காயங்கள் ஏற்படுத்தி சித்திரவதைக்குள்ளாக்கியதாகவும் யுவதி முறைப்பாட்டில் தெரிவித்தார்.
வீட்டுக்கு செல்லமாட்டேன், காதலனை கண்டுபிடித்து சேர்த்து வையுங்கள் என யுவதி பொலிஸ் நிலையத்தில் அடம்பிடித்து வருகிறார்.