நாட்டில் நேற்று 787 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம், தொற்றாளர்களின் எண்ணிக்கை 56,863 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் உலகளவில் 93வது நாடாக இலங்கை பதிவாகியுள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 784 பேர் மினுவாங்கொட- பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர். துனிசியாவிலிருந்து நாடு திரும்பிய இருவரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து நாடு திரும்பிய ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 633 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 48,617 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, தற்போது 7,968 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 793 நபர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
இதேவேளை, நேற்று 2 கொரோனா மரணங்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்தார். கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 278 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு 08 (பொரளை) பிரதேசத்தைச் சேர்ந்த, 82 வயதான ஆண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவிற்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (22) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (22) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா, குருதி விஷமடைவு மற்றும் சிறுநீரக செயலிழப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.