ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பழைய ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை விசாரணை செய்வதற்கு புதிய ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார்.
இவ்வாறானதொரு ஆணைக்குழுவொன்று தற்போதைய சூழலில் தேவையற்றதொன்று என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
ஜனாதிபதி நியமித்துள்ள புதிய ஆணைக்குழு தொடர்பில் செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போதே இதனை தெரிவித்தார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,
இவ்வாறான ஆணைக்குழுவினை நியமிப்பதன் மூலம் காலத்தினை கடத்தலாம் என்று கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் எண்ணுகிறது.
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியன தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது போன்று காண்பித்து தமிழ் மக்களையும், சர்வதேசத்தினையும் ஏமாற்றிவிடலாம் என்றும் இந்த அரசாங்கம் கருதுகின்றது.
எம்மைப் பொறுத்தவரையில், புதிய விசாரணை ஆணைக்குழுவானது ஏமாற்று வித்தையாகும். அதற்கு எவ்விதமான பெறுமதியும் இல்லை. அதன் விசாரணைகளும், அறிக்கைகளும் எவ்விதமான பயனையும் தரப்போவதில்லை. அதன் மீது எமக்கு நம்பிக்கையும் இல்லை.
இலங்கை அரசாங்கத்தினை பொறுத்தவரையில் பொறுப்புக்கூறல் செயற்பாட்டினை குழி தோண்டிப் புதைப்பதையே விரும்புகின்றது.
அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. எமது மக்களுக்கான பொறுப்புக்கூறல் செய்யப்பட வேண்டும். அதில் எவ்விதமான விட்டுக்கொடுப்பிற்கும் இடமில்லை.
அரசாங்கம் புதிய விசாரணை ஆணைக்குழு போன்ற குறைபாடுடைய விடயங்களை பயன்படுத்தி தப்பித்து விட முடியாது.
பொறுப்புக்கூறலைச் செய்வதற்கான எமது தீவிர செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறும் என்பதில் மாற்றமில்லை என்றார்.