தமிழ் முற்போக்கு கூட்டணியை பிளவடைய செய்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக, அதன் தலைவர் மனோ கணேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதுசம்மந்தமாக அவர் தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
அதில், தமிழ் முற்போக்கு கூட்டணியில் பிளவை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம், கூட்டணியின் உறுப்பினர்களை விலைபேசி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கூட்டணியை பிளவுப்படுத்த நினைப்பவர்களை தாம் மன்னிக்கப்போவதில்லை என்றும், இந்த விடயத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு ஆதரவாளர்கள் கரங்கோர்க்க வேண்டும் என்றும் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, மலையக மக்கள் முன்னணியின் மத்திய செயற்குழுவினது விசேட கூட்டம் ஒன்று இந்த மாதம் 31ம் திகதி நடைபெறவுள்ளது.
20ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்தமைக்காக, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாரிடம் கட்சி விளக்கம் கோரி இருந்தது.
அவர் தமது விளக்கத்தை தபால் மூலம் அனுப்பி இருப்பதாக கூறப்படுகின்ற நிலையில், அதுதொடர்பாக ஆராய்வதற்காகவே இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்துக்கு ஆதரவளித்த மலையக மக்கள் முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் மலையக மக்கள் முன்னணியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றிருந்தது.
இதன்போது கட்சியின் வளர்ச்சிக்கான புதிய அமைப்பாளர்கள் நியமனங்கள் குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.