ஜெனீவா மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்சலெட்டின் அறிக்கையை நிராகரிப்பதாக கோட்டாபய தலைமையிலான ராஜபக்ச அரசாங்கம் அறிவித்துள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசியலமைப்புச் சட்டங்களுக்கு உட்பட முறையில் உள்ளக விசாரணைகளை நடத்த முடியும் என ராஜபக்ஷ அரசாங்கம் ஜெனீவா மனித உரிமை பேரவைக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்சலெட்டினால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையின் பெரும்பகுதியை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
மிச்சேல் பெச்சலெட்டின் அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை நிராகரித்து, பதில் அனுப்பியுள்ளமை குறித்து இதுவரை ஸ்ரீலங்கா உத்தியோபூர்வமாக அறிவிக்கவில்லை.
இதேவேளை ஜெனீவா மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்சலெட் அனுப்பிய பரிந்துரைகளுக்கான பதில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை வழங்கப்படுமென வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்திருந்தார்.
நேற்றைய தினம் கருத்து வெளியிட்ட அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, இறுதிப் போரில் படையினர் குற்றமிழைக்கவில்லை என்றும் குற்றம் புரிந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை எனவும் தெரிவித்தார்.
எனினும் குற்றம் இழைத்ததாக கூறப்படும் படையினரை விசாரணை செய்ய அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ சிறப்பு விசாரணைக்குழு ஒன்றை அமைத்துள்ளார் என்றும் விரைவில் இந்தக் குழு விசாரணைகளை ஆரம்பிக்குமெனவும் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.
மனித உரிமைச் சபையின் தீர்மானங்கள் இலங்கை அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை எனவும் பொறுப்புக்கூறவில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகியுள்ளதாகவும் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்சலெட் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பியுள்ள பரிந்துரைகளில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை பொறுப்புக் கூறத் தவறியதால் ஐசிசி எனப்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையை பாரப்படுத்துமாறும், உறுப்பு நாடுகளுக்கான பரிந்துரைகளில் மனித உரிமைச் பேரவையின் ஆணையாளர் கேட்டுள்ளார்.
இந்தப் பரிந்துரைகளின் பிரதியே கடந்த அண்டு நவம்பர் மாதம் இலங்கை அரசாங்கத்திடம் மனித உரிமைச் சபையின் ஆணையாளர் கையளித்திருந்தார்.
இவ்வாறு இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டிருந்த பிரதி கசிந்துள்ளதுடன், கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கிலப் வாரப் பத்திரிகை ஒன்று அதனை பிரசுரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.