நாட்டில் நேற்றைய தினம் 826 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்து 983 ஆக அதிகரித்துள்ளது,
அத்துடன் நேற்று தொற்றுறுதியானவர்களில் 816 பேர் பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது,
மேலும் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த 10 பேருக்கும் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்தை கடந்துள்ளது.
நேற்று மேலும் 916 பேர் குணமடைந்து சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறியதற்கு அமைய இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன்படி நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 58 ஆயிரத்து 78 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில் தொற்றுறுதியான 6 ஆயிரத்து 585 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தைச் சேர்ந்த 5 மாணவர்கள் உள்ளடங்கலாக 6 பேருக்கு நேற்றைய தினம் கொவிட்-19 தெர்றறுறுதியானதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
காத்தான்குடி, கல்முனை மற்றும் மூதூரைச் சேர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் ஐந்து பேருக்கே இவ்வாறு தொற்றுறுதியானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 373 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைகளின் போது குறித்த 6 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.