ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு வருகை தருகின்றமை அரசியல் ரீதியில் அரசாங்கத்திற்கு நன்மை இல்லாதது என்றாலும், அவர் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டிய ஒருவர் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அந்த செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஐக்கிய தேசியக் கட்சியில், அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை தவிர, வேறு எந்தவொரு நபருக்கும் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிப்பதற்கான தகுதி கிடையாது.அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு தகுதியான நபர், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே.
வலுவான எதிர்க்கட்சியொன்று அனைத்து சந்தர்ப்பங்களிலும் தேவை. எனினும் தற்போதைய எதிர்க்கட்சி பயனற்றதாகும்.
இதற்கு முன்னர் காணப்பட்ட கூட்டு எதிர்க்கட்சி பயனுள்ளது. தற்போதுள்ள எதிர்க்கட்சிக்குள் காணப்படுகின்ற முரண்பாடு ஜனநாயகத்திற்கு சரிவராது.
வலுவான எதிர்க்கட்சியொன்று இருக்கும் போது, அரசாங்கம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சரியான ஆட்சி முறையொன்றை கொண்டு செல்வதுடன், சவால் விடுக்கவும் முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.


















