வடக்கில் புத்தர் சிலை வைக்க முடியாதென பேரணி செல்லும் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் போன்றோருக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேக்கர தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வொன்றை தமிழ் மக்களே தெரிவு செய்து கொள்ளும் வகையிலான பொது வாக்கெடுப்பொன்று சர்வதேச சமூகத்தினால் நடத்தப்படுவதற்கு, இந்தியா தலைமையேற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்ட கருத்து தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் கொழும்பில் பிறந்து றோயல்கல்லூரியில் கல்வி பயின்று பின்னர் சட்டக்கல்லூரி சென்று சிங்களவர்களுடன் கல்வி பயின்று நீதிபதியானார். பின்னர் உயர்நீதிமன்ற நீதிரசராகவும் பதவிவகித்தார்.
இவ்வாறு 68 ஆண்டுகள் சிங்களவர்களுடன் வாழ்ந்துவிட்டு தற்போது வடக்கிற்கு சென்று சிங்களவர்களுக்கு வாழ்வதற்கு உரிமையில்லையெனக் கூறுகின்றார். வடக்கில் எந்தவொரு புத்தர் சிலை நிறுவ முடியாதென ஆர்ப்பாட்டம் செல்கின்றார்கள்.
இவ்வாறானவர்களே இனங்களுக்கிடையில் வேற்றுமையை ஏற்படுத்துகின்றனர். இவ்வாறாக ஒற்றுமையின்மையை ஏற்படுத்தும் விக்கினேஸ்வரன் போன்றோருக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.