வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் கொவிட் -19 தடுப்பூசி வழங்குவதற்காக சுமார் 118 தடுப்பூசி வழங்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணத்தில் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதுடன் அவர்களில் 85 சதவீமான உத்தியோகத்தர்கள் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கில் மக்களுக்கு தடுப்பூசிகள் வழங்குவதற்கு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனர்.
அதேவேளை, 30 தொடக்கம் 60 வயது வரையானோருக்கு தடுப்பூசி முதற்கட்டமாக வழங்கப்படுவதுடன், அவர்கள் குறித்த பெயர் விபரங்கள் பிரதேச செயலாளர்கள் ஊடாக சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன் தடுப்பூசி போடுவதற்கு மக்களை பிரதேச செயலக ஊழியர்களே ஒழுங்குபடுத்தி அழைத்துவருவார்கள் என்றும், வடக்கில் தடுப்பூசி போடுவதற்காக 118 நிலையங்கள் அமைக்கப்பட்டுவருவதாகவும், தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றவுடன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கிவிடும் எனவும் அவர் கூறினார்.



















