பங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள அசாத் சாலியை 18 மாதங்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்ள முடியுமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் முகமாக அசாத்சாலி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவரை 18 மாதங்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்த முடியும்.
அதற்கு முன்னர் விசாரணைகள் நிறைவடைந்தால் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படுவார்.
உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் மற்றும் அதன் பின்னரான செயற்பாடுகள் தொடர்பில் அவரிடம் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.