சர்வதேச ரீதியில் அனைத்துத்தரப்பினரும் ஜனநாயகம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடனேயே செயற்பட்டு வருகின்றார்கள். எமது நாட்டின் இராணுவம் கௌரவம் வாய்ந்தது என்பதுடன், தேசிய பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக அவர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றியிருக்கிறார்கள். எனினும் யாரேனும் சட்டத்திற்கு அப்பால் சென்று, குற்றம் புரிந்திருப்பின் அதற்குப் பதில் கூறவேண்டியது கட்டாயமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாம் தவறிழைத்திருந்தால், அதற்குப் பதில் கூறவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. எமது தரப்பில் தவறு காணப்பட்டால், அவற்றை ஏற்றுக்கொள்வது அவசியமாகும். எமது விவகாரங்கள் தொடர்பில் கேள்வி எழுப்புவதற்கு அமெரிக்காவிற்கோ அல்லது மேற்குலக நாடுகளுக்கோ என்ன உரிமை இருக்கிறது? என்று சிலர் கேட்கிறார்கள். அதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்
அமெரிக்கா, குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆட்சிக்காலத்தில் செயற்பட்ட விதம் மற்றும் இஸ்ரேல் தொடர்பில் கொண்டுவந்த தீர்மானங்கள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்டவை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாகும். அதேபோன்று சில நாடுகளுக்கு எதிரான தீர்மானங்களின் போது அமெரிக்கா அதன் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றது. இவற்றுக்கு எதிராக நாம் குரலெழுப்ப வேண்டும்.
எனினும் எமது தவறுகளை மறைத்துக்கொள்வதற்கு அவற்றைக் காரணமாகக் கூறமுடியாது. சர்வதேச ரீதியில் அனைத்துத்தரப்பினரும் ஜனநாயகம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடனேயே செயற்பட்டு வருகின்றார்கள். எமது நாட்டின் இராணுவம் கௌரவம் வாய்ந்தது என்பதுடன், தேசிய பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக அவர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றியிருக்கிறார்கள். எனினும் யாரேனும் சட்டத்திற்கு அப்பால் சென்று, குற்றம் புரிந்திருப்பின் அதற்குப் பதில் கூறவேண்டியது கட்டாயமாகும்.
அத்தோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் போர்க்குற்றங்கள் தொடர்பில் மாத்திரம் கேள்வி எழுப்பவில்லை. தற்போது பொதுநிர்வாகக் கட்டமைப்புக்களின் ஜனநாயகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் அவற்றுக்குப் பொறுப்பாக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை நியமித்து சர்வாதிகாரத்தை நோக்கிப் பயணித்தல் மற்றும் நாட்டுமக்களின் உரிமைகளை மறுத்தல் ஆகியவை தொடர்பிலும் கேள்வி மனித உரிமைகள் பேரவை கேள்வி எழுப்பியுள்ளது. ஆகவே இதன் அனைத்துப் பக்கங்களையும் அவதானத்துடன் நோக்கும் அதேவேளை, நியாயமான விடயங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.