பிரான்சில் கடந்த சில தின தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில், 29,975 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் கொரோனா தொற்று எண்ணிக்கை 4.5 சதவீதம் உயர்ந்துள்ளது.
தலைநகரான பாரிஸ் உள்ளிட்ட நகரங்களில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலை பரவி வருவதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, பிரான்சில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடுமையாக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று குறித்த அதிகாரிகள் அளவிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதில், பிரான்சின் பல்வேறு நகரங்களில் பல கட்டங்களாக கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடுமையாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படுவதாக புகார்கள் வந்த நிலையில், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் அந்த தடுப்பூசி பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.
ஆனால், இந்த தடுப்பூசியால் எந்த ஆபத்தும் இல்லை என்று கூறப்பட்டுள்ளதால், இதன் தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் துவங்கப்படும் என்று நம்பப்படுகிறது.



















