மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வுகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் உடனடியாக நிறுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் இலுப்படிச் சேனை வேப்பவெட்டுவான் வீதியினூடாக மண் ஏற்றும் செயற்பாட்டுக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வேப்பவெட்டுவான் பாலக்காடு பிரதேசத்தில் வயல் திருத்தம் என்ற பெயரில் சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுவதாக அப்பிரதேச மக்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கள விஜயம் மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில் குறித்த பிரதேசத்தில் மண் அகழ்ந்து இலுப்படிச்சேனை வேப்பவெட்டுவான் வீதியினூடாக மண் ஏற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பில் ஆராய்வதற்காக ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான எஸ்.வியாழேந்திரன் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.
குறித்த குழுவினர் நேற்று பிரதேசத்தினைப் பார்வையிடுவதற்காக களவிஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இந்த விஜயத்தின் போது இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரம், இரா.சாணக்கியன், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, புவிச்சரிதவியல் திணக்கள மாவட்டப் பணிப்பாளர், நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், வீதி அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனார்.
அத்துடன் மணல் அகழ்வு நடைமுறை தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்ட போது மண் அகழும் பணிகளில் ஈடுபடுபவர்கள் அரசியல் பிரதிநிதிகளுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அத்துடன் வேப்பவெட்டுவான் பிரதேசத்தில் வயல் திருத்தம் என்ற பெயரில் மண் அகழ்வு செய்யப்பட்ட மேலுமொரு இடமும் பிரதிநிதிகளால் பார்வையிடப்பட்டது.
அதன் பிற்பாடு ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலகத்தில் இது தொடர்பான விசேட கலந்துரையாடலும் இடம்பெற்றது.
இதன்படி வேப்பவெட்டுவான் பிரதேசத்தில் இலுப்படிச் சேனை வேப்பவெட்டுவான் வீதியினூடாக மண் ஏற்றும் செயற்பாட்டுக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் விதிக்கப்பட்ட தடை அப்படியே நீடிப்பதெனவும், குறித்த தீர்மானத்தை உரிய முறையில் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.