இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மந்தகதியில் காணப்படும் இந்த தருணத்தில் படுகுழியை நோக்கி விழக்கூடிய இந்த தருணத்தில் வெளிவிவகார உறவுகள் எங்களுக்கு மிகவும் அவசியமானவை என மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.
மனித உரிமை பேரவை தீர்மானத்தின் அடிப்படையில் ஐநா தடைகளை விதிக்கமுடியாது. ஆனால் நாடுகள் தனித்தனியாக தடைகளை விதிக்கலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உயர்மட்டம் எவ்வாறான தீர்மானங்களை எடுத்தாலும் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என நான் எப்போதும் தெரிவித்துவந்துள்ளேன் என குறிப்பிட்டுள்ள மங்களசமரவீர பொதுமக்களை பாதிக்கும் தடைகளை விதிக்கவேண்டாம் என உலக நாடுகளை கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
மனிதஉரிமை பேரவை தீர்மானம் தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் அரசாங்கம் இராஜதந்திரத்தின் மீது நம்பிக்கை வைக்கவேண்டும் மோதல்போக்கின் மீது நம்பிக்கை வைக்ககூடாது என தெரிவித்துள்ளார்.
இதுவே முதல்கட்டநடவடிக்கையாக காணப்படவேண்டும்.இராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் அனைத்து வகையான தீர்வுகளை காணமுடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உங்களை விமர்ச்சிப்பவர்களை நீங்கள் எதிரிகள் என குற்றம்சாட்டினால் இலங்கை எதனையும் சாதிக்க முடியாது என குறிப்பிட்டுள்ள மங்களசமரவீர மனித உரிமை தொடர்பான அனைத்து பிரகடனங்களிலும் இலங்கை கைச்சாத்திட்டு அதனை ஏற்றுக்கொண்டுள்ளதால் இலங்கை,வடகொரியா எரித்திரியா போல செயற்பட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகை சமநிலையோடு அணுகிய நாடு லங்கை என தெரிவித்துள்ள மங்களசமரவீர உலகம் எங்களை நேசிக்கின்றது எங்களது ஆட்சிக்காலத்தின் நான்குவருடங்களும் உலகம் அவ்வாறே நடந்துகொண்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் அவர்களுடன் ஈடுபாட்டை காண்பிக்க ஆரம்பித்தால் அவர்கள் எந்த வழியில் சென்றாவது எங்களுக்கு உதவமுன்வருவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மந்தகதியில் காணப்படும் இந்த தருணத்தில் படுகுழியை நோக்கி விழக்கூடிய இந்த தருணத்தில் வெளிவிவகார உறவுகள் எங்களிற்கு மிகவும் அவசியமானவை எனவும் மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதி செய்யவும் நாங்கள் படிப்படியாக நடவடிக்கைகளை எடுத்தோம் என குறிப்பிட்டுள்ளார்.
காணாமல்போனவர்கள் அலுவலகத்தை அமைப்பதற்கான சட்டமூலத்தை கொண்டுவந்தோம் அது நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டவேளை என்னை தாக்க முயன்ற எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து அரசநாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னை காப்பாற்றவேண்டிய நிலையேற்பட்டது என மங்களசமரவீர குறிப்பிட்டுள்ளார்.
உண்மை நீதி ஆணைக்குழு தொடர்பான அமைச்சரவை பத்திரம் தயாராகயிருந்தது ஆனால் அவ்வேளை ஜனாதிபதியாகயிருந்த மைத்திரிபால சிறிசேன பல கேள்விகளை கேட்டதால் அது தாமதமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.