பொது போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட 53 இருக்கைகள் கொண்ட பேருந்தை ஓட்டிய குற்றச்சாட்டில் 15 வயது பாடசாலை சிறுவனை மிட்டெனிய பொலிசார் கைது செய்துள்ளனர்.
அத்துடன் பிரதான சாலையில் பேருந்தை ஓட்ட அனுமதித்ததற்காக, சிறுவனின் தந்தை மீதும் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வீரகெட்டியவிலிருந்து மிட்டெனியவுக்கு பேருந்தை ஓட்டிச் சென்ற சிறுவன், வாகனங்களை ஆய்வு செய்யும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மிட்டெனிய பொலிஸில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் 15 வயது பாடசாலை மாணவன் என்றும் , க.பொ.த. சாதாரண தர தேர்வை முடித்தவர் என்பதுடன் , கைது செய்யப்பட்ட நேரத்தில் செல்லுபடியாகும் சாரதி உரிமம் இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சிறுவனின் தந்தை பின்னர் மிட்டெனிய பொலிஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டார், அங்கு அவரிடமிருந்தும் சிறுவனிடமிருந்தும் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன.
அதன் பின்னர் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதுடன் திங்களன்று வாலஸ்முல்லா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.



















