கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரீன் ஃபீல்ட் தொடர்மாடியில் மாவட்ட புலனாய்வு பிரிவு மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் 17.80g அளவிலான சுமார் இரண்டு லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை கல்முனை பொலிஸார் இன்று கைப்பற்றியுள்ளனர்.
விசேட புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்தவின் கட்டளையின்படி போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் அருணன் உள்ளிட்ட பொலிஸார் ஒன்றாக இணைந்து சுற்றி வளைத்து தந்தை மற்றும் மகன் இருவரையும் கைது செய்துள்ளனர்.
மேலும் சந்தேகநபர்களை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறான போதைப்பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் மற்றும் அவற்றை வாங்கி உபயோகிப்பவர்கள் சம்பந்தமாக தகவல் ஏதும் கிடைக்கப் பெற்றால் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.