உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் ஆனது அனைத்து நாடுகளிலும் பரவி வருகிறது. அதிலும், கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடம் வகிக்கும் நாடு அமெரிக்கா.
மேலும், கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசி போடும் பணியும் அந்நாட்டில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இதனால் சமீப காலமாக அங்கு நோய்த்தொற்று பரவல் குறைந்து வருகிறது. இதையடுத்து, கொரோனா தடுப்பூசியை முழுமையாக எடுத்துக் கொண்டவர்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய தேவையில்லை.
6 அடி சமூக இடைவெளியைப் பின்பற்ற தேவையில்லை என அமெரிக்கா நோய்க்கட்டுப்பாட்டு தடுப்பு அமைப்பு அறிவித்துள்ளது.
மேலும், முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட எவரும் மாஸ்க் அணியாமல் உட்புற மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளில் பங்கேற்கலாம். தனி மனித இடைவெளியை பின்பற்றவும் தேவையில்லை.
இது உற்சாகமான மற்றும் சக்திவாய்ந்த தருணம். இதனால், நாம் அனைவரும் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோர் மாஸ்க் அணியாமல் இருப்பதற்கு முன் தங்கள் மருத்துவர்களுடன் ஆலோசிக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் கணிக்க முடியாதது என்பதை கடந்த ஆண்டு நமக்குக் காட்டியுள்ளது. எனவே விஷயங்கள் மோசமாகும் நிலையில் இந்த பரிந்துரைகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.



















