கொழும்பு துறைமுகத்திலிருந்து 9.5 கடல் மைல் தொலைவிலுள்ள எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்டுள்ள தீ விபத்து தொடர்பில் எக்ஸ்பிரஸ் பேர்ல் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிம் ஹார்ட்னொல் (Tim Hartnoll) தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி குறித்த கப்பலில் ஏற்றிச்செல்லப்பட்ட இரசாயன திரவியம் கசிந்ததால் இந்த தீ ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், இந்த கப்பலில் ஏற்றிச்செல்லப்பட்டிருந்த 1486 கொள்கலன்களில், 25 டொன் நைட்ரிக் அமிலம் அடங்கிய பல கொள்கலன்களும் காணப்பட்டுள்ளன.
இந்த கொள்கலன்கள் முறையாக களஞ்சியப்படுத்தப்படாமையே இந்த தீ ஏற்படுதற்கான காரணம். ஆபத்து நிலைமை அடையாளம் காணப்பட்ட சந்தர்ப்பத்தில், இந்தியாவின் மேற்கு பகுதியிலுள்ள ஹசீரா துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்காக அனுமதி கோரப்பட்டிருந்தது.
எனினும், ஹசீரா துறைமுகத்தினால் இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை. அதனையடுத்து, கட்டாரிலுள்ள ஹாமட் துறைமுகத்துக்குள் இந்தக் கப்பல் பிரவேசிக்க முயற்சி கோரிய போதிலும், அக்கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.
அதன்பிறகு, அக்கப்பல் தனது அடுத்த பிரயாண இலக்கான இலங்கை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது. எனினும், கொழும்பு துறைமுகத்துக்கு பிரவேசிக்க அனுமதி கோர முன்னதாகவே கப்பலில் தீ ஏற்படுவதற்கான ஆபத்து நிலைமை தோன்றியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கப்பல் முன்னதாக அனுமதி கோரியிருந்ததற்கு இணங்க, இந்தியாவில் அல்லது கட்டாரில் உள்ள துறைமுகங்கள் ஒன்றில் அனுமதி வழங்கப்பட்டிருக்குமானால் இந்த பாரிய அழிவிலிருந்து தப்பிக்க முடியுமானதாக இருந்திருக்கும் எனவும் கூறியுள்ளார்.