சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசி மருந்தை பெற்றுக்கொள்ள இலங்கை 5 டொலர்களை மேலதிகமாக செலுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
14 மில்லியன் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியது. அதில் எந்த பிரச்சினையும் இல்லை. எமது மக்களுக்கு தடுப்பூசியை வழங்குவதே முதன்மையான பணி.
ஆரம்பத்தில் இருந்து இதனையே நாம் கூறி வந்தோம். மூடநம்பிக்கையின் பின்னால் செல்லாது அறிவியலின் பின்னால் செல்லுங்கள் எனக் கூறினோம்.
உலக சந்தையில் நியாயமான விலையில் தடுப்பூசி மருந்துகளை கொள்வனவு செய்ய வேண்டும். சுகாதார அமைச்சர் அமைச்சரவையில் தாக்கல் செய்த அமைச்சரவை பத்திரத்தில் ஒரு தடுப்பூசி மருந்தை கொள்வனவு செய்ய 15 டொலர் என கூறப்பட்டுள்ளது.
அஸ்ரா செனகாவின் விலை 5 டொலராக இருந்தது. அந்த மருந்து இல்லை என்றால் சைனோபார்ம் தடுப்பூசியை கொள்வனவு செய்வது பரவாயில்லை. எனினும் 15 டொலர்களை செலுத்துவதே எமக்குள்ள பிரச்சினை.
பங்களாதேஷ் இதே தடுப்பூசி மருந்தை 10 டொலர்களுக்கு கொள்வனவு செய்கிறது. நாம் மேலதிகமாக 5 டொலர்களை செலுத்துகிறோம். அப்படியானால், 14 மில்லியன் தடுப்பூசி மருந்துகளுக்கு நாட் மேலதிகமாக 70 மில்லியன் டொலர்களை செலுத்துகிறோம்.
எமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள தருணத்தில் இந்த 70 மில்லியன் டொலர் சீனாவுக்கு செலுத்தப்படுகிறாதா அல்லது வேறு யாருடைய பைக்குள் செல்கிறது என்பதை கண்டறிய வேண்டும் எனவும் மரிக்கார் கூறியுள்ளார்.