கோவிட் தொற்றுக்கு இலக்கானோரின் வீடுகளுக்குச் சென்று அவர்களை குணப்படுத்துவதாக தெரிவித்து பண மோசடி மேற்கொள்ளப்படுவதாக மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் போலி வைத்தியர் மற்றும் அவருக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கிய நபர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கெஸ்பேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஹபொல பகுதியில் கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளுக்குச் சென்று, வைரஸ் தொற்றிலிருந்து அவர்களை குணப்படுத்துவதாக தெரிவித்து சிலர் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக, கெஸ்பேவ பகுதியின் சுகாதார வைத்திய அதிகாரியொருவர், கெஸ்பேவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இவ்வாறு மோசடியில் ஈடுப்பட்ட போலி வைத்தியர் ஒருவரையும் அவருக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கிய நபரையும் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் பயன்படுத்திய வேனையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து பல வகையான மருந்துபொருட்களும் மீட்கப்பட்டுள்ளது. சிகிச்சை அளிப்பதற்காக சந்தேகநபர்கள் 12 ஆயிரம் ரூபாய் வரை அறவிடுவதாக தெரியவந்துள்ளது.
இவர்கள் முகப்புத்தகத்தில், கோவிட் வைரஸ் தொற்றிலிருந்து குணப்படுத்துவதற்கு தங்களால் முடியும் என்று பதிவேற்றியுள்ளனர். அதனூடாக தங்களை தொடர்புக் கொள்ளும் நபர்களிடமே இவ்வாறு பண மோசடிகளை செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
கெஸ்பேவ பொலிஸார் சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் அவர்களை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.