சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வீட்டில் (30.05.2021) ஒரே ஒரு மகனான இளைஞன் – கொவிட்-19 நோயாளியாக காணப்பட்டதை தொடர்ந்து அவர் பாலமுனை கொவிட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு – தாயும் தந்தையும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்கள்.
இதனையடுத்து 31.05.2021 மறுநாள் பிற்பகல் – தாய் தந்தையர் இருவருக்குமே கொவிட் 19 இனங்காணப்பட்டதை தொடர்ந்து – தந்தை மகனுடன் பாலமுனை வைத்தியசாலையிலும் – தாய் – மருதமுனை கொவிட் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டார்கள். 63 வயதையுடைய குறித்த தாய் – பலகாலமாக நீரிழிவு, உயர் குருதியமுக்கம், உயர் கொழுப்பு ஆகிய நோய்களுக்காக மருந்துகளை பாவித்து கொண்டிருந்தார். அதேவிதமான சிகிச்சைகளை தொடர்ந்து கொண்டு அவரை அவதானம் கூடிய கட்டிலில் அனுமதித்தோம்.
மறுநாள் 01.06.2021 காலையில் சாதாரணமாக எழுந்து தனது கடமைகளை செய்த அவர், மதியம்போல் உடம்பிற்கு முடியாதிருப்பதாக கூறினார். பரிசோதனை செய்த எமது குழு – சீனி அதிகமாக காணப்பட்டதால் அதை சரிப்படுத்த சிகிச்சைகளை ஆரம்பித்து கொண்டு பின்னேரமளவில் அவரின் உடல்நிலையை சரிப்படுத்தியிருந்தது. பகல் உணவு, இரவு உணவுகளை சாதாரணமாக எடுத்துக் கொண்ட அவர், இரவு 10.30 போல் எழுந்திருந்து யோக்கட் ஒன்றும் சாப்பிட்டு விட்டு உறங்கியவர் , 10.45 போல் மூச்செடுப்பதற்கு சிரமமாக இருப்பதாக முறையிட்டார்.
மீண்டும் முழுப்பாதுகாப்பு அங்கிகளுடன் உள் நுழைந்த குழுவினரால் நீண்ட நேரம் முயற்சி செய்தும் அவரின் மரணத்தைத்தான் உறுதி செய்ய முடிந்தது. அநேகமாக நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் சைலண்ட் கார்ட் அட்டாக்தான் காரணமாக இருக்கும். தற்போது இறந்த உடலை எரிக்க – சம்மதத்தை பாலமுனை கொவிட் வைத்தியசாலையில் இருக்கும் கணவரும் மகனும் சில உறவினர்களும் தந்துவிட்டு தாயாரின் உடலை ஒரு தடவை காட்டுமாறு அழத்தொடங்கினான் அந்த ஒரே மகன். எனக்கும் ஒருமுறை நெஞ்சு விம்மியது.
கொரோனா வைத்தியசாலையில் இருக்கும் ஒருவரை வெளியே அழைத்துவர முடியாதே. இருந்தாலும் அந்த தாயின் இறுதி நிமிடங்களில் மகனையும் கணவரையும் தவிர்த்து கொண்டு போய் எரிப்பதா. மனது இடம் கொடுக்கவேயில்லை. அந்த தாயின் உடலை மருதமுனை வைத்தியசாலையில் இருந்து அம்பாறை எரியூட்டிக்கு கொண்டு செல்வதற்கு முன், பாலமுனை கொவிட் வைத்தியசாலையில் கணவரதும் மகனினதும் இறுதி அஞ்சலிக்காக ஐந்து நிமிடங்கள் கொண்டு செல்லுமாறு பணித்தேன். ஆயத்தங்களையும் செய்தோம். பாதுகாப்பு வழங்கிய பொலிஸ், இராணுவத்தினரும் என் பேச்சுக்கு இசைந்தார்கள். பாலமுனையில் கணவன், மகன் இருவர்களினதும் அஞ்சலியை முடித்து முடிந்தவளவு கௌரவமாக இறுதி மரியாதை செலுத்தி அக்கினியிடம் ஐக்கியம் செய்தோம்.
ஒவ்வொருவரும் சுகாதார அறிவுரைகள் மதித்து நடந்து கொள்ள வேண்டும் அன்றி மதிகெட்ட மந்தைகளாக நடந்து கொண்டால் தாய் தந்தையரைத்தான் இழக்க நேரிடும். தயவுசெய்து விளங்காவிட்டால் மீண்டும் ஒரு முறை வாசிக்கவும். இன்னும் எத்தனை எத்தனை இப்படி கதைகளை நிஜத்தில் காணப்போகின்றேனோ இறைவா. ( கல்முனை RDHS பணிப்பாளர் சுகுணனின் முகநூலில் இருந்து )