இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால் அதை கருத்தில் கொண்டு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஏற்கனவே தேர்வு செய்து வைத்துள்ளது.
இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் உலக கோப்பை போட்டியை நடத்துவதற்கான முதற்கட்ட பணிகளை ஐ.சி.சி. தொடங்கி விட்டது. அக்டோபர் 17-ந்தேதியில் இருந்து நவம்பர் 14-ந்தேதி வரை அங்கு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்த ஐ.சி.சி. உத்தேசித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையே, 20 ஓவர் உலக கோப்பை போட்டி இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு மாற்றப்படும் என்பதை இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொண்டுள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா நேற்று அளித்த பேட்டியில், ‘இந்தியாவில் நிலவும் கொரோனா பாதிப்பு காரணமாக இந்த போட்டி இங்கிருந்து அமீரகத்துக்கு மாற்றப்படலாம். நிலைமையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். வீரர்களின் பாதுகாப்பும், உடல் ஆரோக்கியமும் மிகவும் முக்கியம். 20 ஓவர் உலக கோப்பை போட்டி குறித்து விரைவில் இறுதி முடிவு எடுப்போம்’ என்றார். அதற்கு முன்பாக இந்தியாவில் பாதியில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அமீரகத்தில் நடத்தப்பட இருப்பது நினைவு கூரத்தக்கது.