மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை சுகாதார பணியாளர்கள் நீண்ட நாட்களாக வழங்கப்படாத மேலதிக நேர கொடுப்பனவை விரைவில் வழங்கக் கோரி அடையாள பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த மாதமும் தாங்கள் போராட்டம் மேற்கொண்டிருந்த நிலையில் தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி இது வரை நிறைவேற்றப்படாமையும், கோவிட் காலப்பகுதியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் தங்களுக்கு உரிய நேரத்தில் மேலதிக நேரக் கொடுப்பனவு கிடைக்கப் பெறவில்லை என்பதையும் சுட்டிக் காட்டி இன்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பாகக் கடந்த வருடத்திற்கான மேலதிக நேரக் கொடுப்பனவே நீண்ட இழுபறியின் பின்னர் கிடைக்கப் பெற்றதாகவும், இவ்வருடத்தில் பல மாதங்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனவும், எனவே விரைவில் மேலதிக நேர கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலதிக நேர கொடுப்பனவுகள் கிடைப்பதில் மேலும் தாமதம் ஏற்படும் பட்சத்தில் தொடர்ச்சியாகப் போராட்டங்களை மேற்கொள்வதை தவிர தங்களால் வேறு எதுவும் செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.