சென்னையில் பேஸ்புக் தோழி வீட்டில் 2 இலட்சம் பணம் மற்றும் 21 சவரன் நகையைத் திருடி சொகுசுக் கார் வாங்கிய இலங்கை இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து தெரியவருகையில், சென்னை திருவல்லிக்கேணி வெங்கடேசபுரம் 3வது தெருவைச் சேர்ந்த பவித்ரா செவிலியராக பணிப்புரிந்து வருகின்றார். இவர், கடந்த 12ஆம் திகதி ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், தனது கணவர் விஜயசாரதி, அமரர் ஊர்தி சொந்தமாக வைத்து நடத்தி வருவதாகவும், கடந்த வருடம் ஓகஸ்ட் 12ஆம் திகதி தனது கணவர் ஊழியர்களுக்கு பணம் கொடுக்க பீரோவில் வைத்திருந்த பணத்தை எடுக்கச் சென்றபோது 2 இலட்சம் பணம் மற்றும் 21 சவரன் நகைகள் காணாமல் போயிருந்ததாகவும், குறிப்பிட்டிருந்தார்.
அவர் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியபோது சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் ஆய்வு நடத்தியதில் மூன்று கைரேகை பதிவுகள் பீரோவில் பதிவாகி இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து அருகிலுள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது, வீட்டிற்கு வரக்கூடிய நபர் ஒருவர் பீரோவிலிருந்த நகை மற்றும் பணத்தை திருடி செல்லும் பதிவாகி இருந்தது. பவித்ரா மற்றும் அவரது கணவருக்குத் தெரிந்த நபர்களே திருட்டில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகமடைந்த பொலிசார் கடைசியாக பவித்ராவின் செல்போன் எண்ணிலிருந்து சென்ற எண்களை ஆய்வு செய்தபோது சுமன் என்பவருக்கு அவர் அடிக்கடி போன் செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து செல்போன் எண்களை வைத்து பொலிசார் நடத்திய விசாரணையில், சேலையூர் அருகேயுள்ள பதுவஞ்சேரியில் தலைமறைவாக இருந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுமனை (23) போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சுமனிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியானது. சுமனின் தந்தை ஒரு இந்தியர் எனவும் அவரது தாயார் இலங்கையர் எனவும் கூறப்படுகின்றது. சுமனின் , அண்ணன் சலூன் கடை வைத்து நடத்தி வருவதாகவும், சுமன் மட்டும் வேலையில்லாமல் சுற்றி வந்துள்ளார். இந் நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முகநூல் மூலமாக பவித்ராவுடன் சுமனுக்கு பழக்கம் ஏற்பட்டதும் தெரியவந்தது.
மேலும், வசதியான நபர் போல் பாவித்து சுமன் பவித்ராவுடன் பழகியுள்ளார். இந்த பேச்சு நட்பாக மாற தொடங்கியதனையடுத்து சுமன் அடிக்கடி பவித்ரா வீட்டிற்கு வந்து சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 12 ஆம் திகதி பவித்ரா வீட்டில் இருந்த பீரோவில் நகை மற்றும் பணம் இருப்பதை அறிந்துகொண்ட சுமன் திருட திட்டமிட்டுள்ளார். அதன்படி வீட்டில் பவித்ரா தனியாக இருந்தபோது உணவு வாங்கி வர பவித்ராவை அனுப்பிவிட்டு, பணம் மற்றும் நகைகளை திருடிவிட்டு சகஜமாக பேசிவிட்டு சுமன் சென்றுள்ளார்.
அத்துடன் பவித்ரா திருடிய பணத்தில் சுமன் சொகுசு கார் ஒன்றை வாங்கி, சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சுமனிடமிருந்து 1 லட்சத்து 60 ஆயிரம் பணம் மற்றும் 20.861 கிராம் நகைகள் மற்றும் அவர் வாங்கிய காரையும் பறிமுதல் செய்த பொலிசார் , சுமனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.