கிளிநொச்சி பரந்தன் கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட கோரக்கன் கட்டுப்பகுதியில் கமக்கார அமைப்பினால் சட்டவிரோதமான முறையில் விவசாயிகளிடம் இருந்து பணம் அறவிடப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி பரந்தன் கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட கோரக்கன் கட்டுப்பகுதியில் கமக்கார அமைப்பினால் எந்த வித பயிர் செய்கை கூட்டங்களும் நடத்தப்படாது, நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் ஆகியவற்றின் எந்தவித அனுமதிகளுமின்றி வாய்க்கால் அமைப்பதற்கென ஒவ்வொரு விவசாயிகளிடமிருந்தும் தலா 2,500 ரூபா வீதம் அறவிடப்பட்டிருப்பதாக விவசாயிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயம் தெடர்பில் பரந்தன் கமநல சேவைநிலையத்தின் பெரும்பாக உத்தியோகத்தரை தொடர்பு கொண்டு வினவியபோது,
கோரக்கன் கட்டுப்பகுதியில் இவ்வாண்டுக்கான சிறு போக செய்கை தொடர்பான கலந்துரையாடல்கள் எதுவும் நடத்தப்படவில்லை.
எந்த தீர்மானங்களுமின்றி பற்றுச்சீட்டுகள் இல்லாது விவசாயிகளிடமிருந்து பணம் அறவிட பட்டிருந்தால் அது ஒரு சட்டவிரோதமான செயற்பாடாகும்.
இது தொடர்பாக விவசாயிகள் முறைப்பாடு தெரிவிக்கும் இடத்தில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு தாங்கள் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இப் பிரதேசத்தில் சிறு போக செய்கை மேற்கொள்வதற்கான எந்த தகவல்களும் எங்களுக்கு உத்தியோக பூர்வமாக கிடைக்கவில்லை.
அவ்வாறு கிடைக்கும் போது தான் மானிய கொடுப்பனவுகள், பயிர் காப்புறுதிகள், ஏனைய கொடுப்பனவுகள் தொடர்பில் விவசாயிகளுடன் பிரதேச மட்ட கலந்துரையால்களை நடத்தி தீர்மானங்களை எடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.



















