முப்பது வருடகால யுத்தத்தில் இருந்து நாட்டைக் காப்பாற்றிய இராணுவம், இன்று நாட்டை அழித்த கும்பலை வீட்டுக்கு அனுப்புவதற்காக மக்கள் வீதியில் இறங்கிய போது, அவர்கள் மீது ஒரு தோட்டாவைக் கூட பிரயோகிக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற கம்பஹா மாவட்ட ஐக்கிய இராணுவ சக்தியின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நாட்டின் முப்படைகளின் தலைமையிலான பாதுகாப்புத் துறையினர், மக்கள் போராட்டத்திற்கு மௌனமாக இருந்து பங்களிப்பை வழங்கியது. நமது நாட்டின் பாதுகாப்புப் படையினர் என்பது நாட்டு மக்களுடன் ஒன்றிணைந்த ஒரு பகுதியினர் என்றும் அவர் தெரிவித்தார்.
அன்று அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்காக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி இராணுவத்தினரின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதாக செயற்பட்ட அரசாங்கம், அவற்றில் ஒன்றையாவது வழங்கியதா என கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர், என்றாலும் தான் ஜனாதிபதித் தேர்தல் காலப்பிரிவில் அனைத்துப் பாதுகாப்புப் படையினருடனும் சமூக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.