முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினதும், கட்சியை விட்டுச் சென்று அரசாங்கத்தில் பதவிகளை பெற்றுக் கொண்ட சகலரினதும் கட்சி உறுப்புரிமைகளை இடைநிறுத்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை முடிவடையும் வரை இவ்வாறு கட்சி உறுப்புரிமைகளை இடைநிறுத்த கட்சி செயற்குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பொது செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் மஹிந்த அமரவீரவை நீக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்று கூடியது.
இதன்போது, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் பொதுச் செயலாளராக திலங்க சுமத்திபாலவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் லசந்த அழகியவண்ண நீக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட பொருளாளருக்கான வெற்றிடத்துக்கு சாரதி துஸ்மந்தவை நியமிக்கவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு முடிவு செய்துள்ளது.