யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் அரசாங்க அதிபர் மகேசன் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான மாவட்ட குழு கூட்டம் இடம்பெற்றது.
இந்த கூட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன்,
போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதில் பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அதற்கு நான் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆனால் இன்னும் முன்னேற வேண்டும். பல குற்றச்சாட்டுக்கள் பொலிஸார் மீது இருக்கின்றன. பொலிஸார் இவர்களுக்கு துணை போகிறார்கள். இவ்வாறு செய்பவர்களை பொலிஸாருக்கு காட்டி கொடுக்கின்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறதான குற்றச்சாட்டு பொது மக்கள் மத்தியில் இருக்கிறது.
இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் போதைவஸ்து கடத்துவதில் கடல் மார்க்கம் பிரதானமான மார்க்கமாக இருக்கிறது.
ஆகவே கடற்படையினர் மீதும் பொது மக்களுடைய குற்றச்சாட்டுக்கள் இன்னும் வலுவாக இருக்கிறது. கடற்படையினரும் இதில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
கடற்தொழிலாளர் சங்கங்கள் ஆகியோரையும் நாங்கள் அணுகி எவ்வாறு போதைவஸ்தினை தடுக்கலாம் என்று கலந்துரையாட வேண்டும். விழிப்புணர்வுகளையும் நடத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை மீட்டுடெடுக்க புனர்வாழ்வு நிலையத்தினை எங்கள் பிராந்தியத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறைகளுக்கு அவர்களை அனுப்புகின்ற பொழுது அங்கு பல்வேறு குற்றச் செயல்களை பழகிறார்கள் என்ற குற்றச்சாட்டு பொதுவாக இருக்கிறது. சிறைச்சாலைக்கு உள்ளேயும் இந்த போதைவஸ்து பாவனை அதிகமாக இருக்கிறது.
[7K468[
மிக மோசமான குற்றவாளிகளோடு பழகும் வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கிறது. போதைவஸ்துவை பாவிப்பவரை நாங்கள் தனியான சிறைக்கு அனுப்புவது பொருத்தமாக இருக்கும். எங்கள் சமூதாயத்தில் ஏராளமான செல்வந்தர்கள் உள்ளார்கள். அவர்கள் இதனை அமைப்பதற்கு பணம் வழங்க தயாராக இருக்கிறார்கள்.
இதற்கான நடைமுறைகளை நாங்கள் முன்னெடுக்க வேண்டும். அரச அதிபர் இதற்கான இடத்தினை தெரிவு செய்ய வேண்டும்.
ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் இதற்கான இடம் ஒதுக்கலாம் அது பொருத்தமாக இருக்கிறது என்று நீதித்துறை சார்ந்தவர்கள் கூறுகிறார்கள். இதனை பரிசீலித்து இதனை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.