யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கில் உள்ள வீதிகளை புனரமைக்குமாறு கோரி மூளாய் அரசடி சந்தியில் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் உள்ள, யாழ்ப்பாணம் – மானிப்பாய் – காரைநகர் வீதி, மாவடி – மூளாய் வீதி, வட்டுக்கோட்டை – பொன்னாலை வீதி என்பவற்றை தற்காலிகமாகவேனும் புனரமைக்குமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மழை காலங்களில் இந்த வீதிகளூடான போக்குவரத்து முற்றாக தடைப்படுகின்றது என தெரிவித்த பிரதேவாசிகள், அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் இவ்விடயத்தில் தீவிர கரிசனை எடுக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மக்களின் போராட்டத்தின் முடிவில் வடக்கு மாகாண ஆளுநர், யாழ்.மாவட்ட செயலர் ஆகியோருக்கு முகவரியிடப்பட்ட கடிதங்கள் வலி.மேற்கு பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டதுடன், அதன் பிரதி வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.
இதேவேளை வீதிப் புனரமைப்பை வலியுறுத்தி சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும் இன்று காலை போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.