கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த போது அவரது ஊடகப் பணிப்பாளராக கடமையாற்றிய பிரபல ஊடகவியலாளர் சுதேவ ஹெட்டியாராச்சி கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுபோதையில் வாகனத்தை ஓட்டிய சுதேவ
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
கண்டியில் இன்று மதியம் மதுபோதையில் வாகனத்தை செலுத்தியமை, வெளிநாட்டு தூதுக்குழுவினரின் பயணம் செய்த வாகனத்திற்கு தடையேற்படுத்தியமை மற்றும் பொலிஸாரின் கட்டளையை மீறி வாகனத்தை செலுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் சுதேவ ஹெட்டியாராச்சி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
சுதேவ ஹெட்டியாராச்சி பயணம் செய்த வாகனம், கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் கடற்படை தளபதியின் வாகனத்திற்கு முன்னால் செல்லும் பாதுகாப்பு வாகனத்திற்கு தடையேற்படுத்தியுள்ளார்.
கடற்படையினர் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருடன் அந்த வாகனத்தில் பிரபல பாடகரும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து இவர்களிடம் வாக்குமூலத்தை பதிவு செய்த பின்னர், பொலிஸ் பிணையில் அவர்களை விடுதலை செய்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுதேவ ஹெட்டியாராச்சி, இலங்கையில் இயங்கும் பிரபல இலத்திரனியல் ஊடகங்களில் பணியாற்றியுள்ளதுடன் தொலைக்காட்சிகளில் அரசியல் விவாத நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார்.