பணிக்கு செல்லும் பெண்களை முறையான முறையில் இரவு நேர கடமைகளில் ஈடுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
காலி பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “பெண்கள் ஏற்கனவே பல்வேறு துறைகளில் இரவுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெண்களுக்கு பாதுகாப்பு
ஆனால் நவீன உலகம் புரியாதவர்கள் இதனை எதிர்க்கிறார்கள். இன்று இரவு நேரங்களில் வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என பெண்கள் கேட்கிறார்கள்.
இந்நிலையில் அவர்களது உரிமைக்கான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதோடு, அதற்கு தேவையான போக்குவரத்து வசதிகள் உள்ளிட்டவற்றையும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
பெண்களை வேலை செய்யும் பணியிடங்களில் அசௌகரியம் ஏற்படாமல் பாதுகாக்க, எல்லா இடங்களிலும் பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் பராமாிப்பு உள்ளிட்ட சில விடயங்கள் காரணமாகவே அறிவார்ந்த பெண்கள் வீட்டில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதனால் பெண்கள் வேலைக்குச் செல்லும் போது, குழந்தைகளைப் பராமரிக்கும் திட்டம் உருவாக்கப்படவுள்ளது.
எனவே இவ்வாறான நிலைகளை நீக்கி எந்த பாலினத்தவருக்கும் சம உரிமை வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.