குற்றச் செயல்களால் சம்பாதித்த சொத்து தொடர்பான சட்டமூலம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களுடன் இன்று (07) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி “சர்வதேச நாணய நிதியத்துடனோ (IMF) அல்லது கடன் வழங்குநர்களுடனோ செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளில் எந்த அளவுகோலையும் மாற்ற முடியாது. அவ்வாறு செய்தால் இலங்கைக்குக் கிடைக்கும் நிதியை இழக்க நேரிடும்.
அனைத்து வேட்பாளர்களும் வாக்காளர்களுக்கு உண்மையைக் கூற வேண்டும். நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் நாட்டை அந்த நிலையில் இருந்து காப்பாற்றி திறமையை நிரூபித்ததன் காரணமாக எமக்கு யாருடனும் போட்டி இல்லை
நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வது குறித்து நான் கவனம் செலுத்தியுள்ளேன். சிலரினால் ஊழலைப் பற்றிப் பேச மட்டுமே முடியும்.
ஆனால் ஊழலைத் தடுப்பதற்காக பல சட்டங்களை இயற்றியுள்ளோம், குற்றச் செயல்களால் சம்பாதித்த சொத்து தொடர்பான சட்டமூலம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும். ஊழல் குற்றச்சாட்டுள்ள எவரையும் நாம் ஒருபோதும் பாதுகாக்கவில்லை“ என தெரிவித்தார்.