பாக்குமரம் ஏறி பாக்குமரத்தின் நுனிப்பகுதியை வெட்டிக் கொண்டிருந்த இளைஞன் நேற்று (08) தவறி கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
16 வயதுடைய கல்பொத்தபதன பரமங்கட பசறை பகுதியை சேர்ந்த இளைஞனே உயிரிழந்துள்ளார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
வீட்டுக்கு அருகாமையில் உள்ள பாக்கு மரத்தை வெட்டுவதற்காக குறித்த இளைஞன் பாக்கு மரத்தில் ஏறி நுனிப்பகுதியில் இருந்து மரத்தினை வெட்டும் போது மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த நிலையில் பசறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று திங்கட்கிழமை (09) அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பதுளை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.