கொழும்பில் (Colombo) உள்ள பிரதான பாடசாலையில் கல்வி கற்கும் 10 மாணவர்கள் கொண்ட குழுவொன்று கண்டி ஹந்தான மலையை பார்வையிடச் சென்ற போது காணாமல் போயிருந்தனர்
இந்த நிலையில், காணாமல் போன 16 முதல் 17 வயதுக்குட்பட்ட குறித்த மாணவர்களை இராணுவத்தினர் பத்திரமாக மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனர்த்தம் குறித்து மேலும் தெரியவருகையில், “ஹந்தான மலையை பார்வையிட சென்ற அவர்கள், அங்குள்ள பாதுகாப்பற்ற பகுதிக்கு சென்றுள்ளனர்.
இதன்போது ஒருவருக்கு காலில் சுளுக்கு ஏற்பட்டதாலும், மூடுபனி காரணமாகவும் வழியைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், திரும்பிச் செல்ல முடியாமல் தவித்ததாகவும் இராணுவத்தினர் தெரிவித்தனர்.
இது தொடர்பில் இராணுவத்தினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து 111 ஆவது படைப் பிரிவின் தலைமையகம் மற்றும் 2 ஆவது இலங்கை சிங்கப் படையணியின் படையினரால் குறித்த குழுவினரை பத்திரமாக மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அதன்படி இரவு 8.00 மணியளவில் இந்த மாணவர்களை மீட்கும் நடவடிக்கை ஆரம்பித்த இராணுவத்தினர், விடியும் வேளையில் மாணவர்களை பத்திரமாக கீழே இறக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















