அம்பாறை – கல்முனை பிராந்தியத்திலுள்ள உணவகங்கள், உணவு கையாளும் நிறுவனங்களை சோதனைக்குட்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிகாட்டலின் கீழ் நேற்று (18) இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காரைதீவு, நிந்தவூர் மற்றும் ஒலுவில் ஆகிய பிரதேசங்களில் உள்ள பழக்கடைகள், ஹோட்டல்கள், வெதுப்பகங்கள் உள்ளிட்ட உணவு கையாளும் நிறுவனங்கள் என்பன திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது சுகாதார விதிமுறைகளை மீறிய உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, பழுதடைந்த உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.
அத்துடன் பாவிக்க முடியாத, சேதமடைந்த உணவு தயாரிக்கும் பாத்திரங்களும் கைப்பற்றப்பட்டன.
பிராந்தியத்தில் உள்ள உணவகங்கள், உணவு கையாளும் நிறுவனங்கள் சோதனைக்குட்படுத்தும் வேலைத்திட்டம் பிராந்திய பணிப்பாளர் உத்தரவிற்கமைவாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





















