இன்று நாட்டில் சட்டம் ஒழுங்குத் துறையில் பாரிய பிரச்சினை ஏற்பட்டு, கொலைகள் இடம்பெற்று வருவதாகவும் சிறு பிள்ளைகள் கூட மரணிப்பதால் இதையும் விட பலமான தீர்வினை அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் அதற்கு எதிர்கட்சி என்ற வகையில் நாமும் ஒத்துழைப்பு வழங்கத் தயார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதன் காரணமாக நீதிமன்றத்தினுள் கூட பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஒருவர் மரண பயத்துடன் நீதிமன்றத்திற்கு செல்வார் என்றால் அது பாரிய பிரச்சினை எனவும் அதனால் இது குறித்து அவதானத்தை செலுத்தி வலுவான தீர்மானங்களை எடுக்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் சமூகத்தில் இது போன்ற சம்பவங்கள் இடம்பெறக்கூடாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது வலியுறுத்தினார்.
சட்டம் ஒழுங்கை பலப்படுத்தும் அதிகாரமும் அரசுக்கு உள்ளதால், இவற்றை தடுத்து நிறுத்தி உடனடியாக இது தொடர்பாக விசேட அறிவிப்பினை வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.




















