வடக்கு மற்றும் கிழக்கில் வனத் துறை, வனவிலங்குத் துறை அதிகாரிகளும் நெல் உற்பத்தியை அதிகரிக்கத் தடையாக இருப்பதோடு இவர்கள் நாட்டின் நெல் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்னும் அரசின் கொள்கைக்கு எதிராகச் செயற்பட்டு வருகின்றனரென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குகதாசன் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கமத்தொழில், கால்நடை அபிவிருத்தி, காணி மற்றும் நீர்பாசனத்துறை அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
அரசால் முன்வைக்கப் பட்டுள்ள பாதீட்டில் கமத் தொழில்இகால்நடை வளங்கள்இ காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு மீண்டெழும் செலவுக்காக 83.9 பில்லியன் ரூபாவும் மூலதன செலவுக்காக 133பில்லியன் ரூபாவும் மொத்தமாக 216.9 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 62 பில்லியன் ரூபா அதிகமாகும். இது வரவேற்கத்தக்கது. .
எனினும் விவசாய மற்றும் கால்நடை துறைக்கான ஒதுக்கீடானது கடந்த ஆண்டை விட 2.6 வீதத்தால் குறைக்கப் பட்டுள்ளதோடு இதன் அபிவிருத்திக்கான ஒதுக்கீடு 5.76 சதவீதத்தால் குறைக்கப் பட்டுள்ளது. நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஊடான அபிவிருத்திக்கான ஒதுக்கீடானது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 22.4 ( 6037 மில்லியன் ரூபா ) சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. இக்குறைப்புகள் நாட்டின் அரிசி உற்பத்தியில் தன்நிறைவு காணவேண்டும் என்ற அரசின் நோக்கத்திற்கு ஏற்புடையதல்ல.
அண்மைக் காலத்தில் இலங்கையில் அரிசி விலை ஏற்றம்இ அரிசித் தட்டுப்பாடு ஆகியன முதன்மையான சிக்கல்களாகக் காணப்படுகின்றன. கேள்விக்கு ஏற்ப நிரம்பல் இல்லாதவிடத்து பொருள் விலையேறும் என்பதை அனைவரும் அறிவர்.
அரிசியின் நிரம்பல் குறைவாக இருப்பதே அதன் விலை ஏற்றத்திற்கு முதன்மையான காரணமாகும். ஒரு காலத்தில் அரிசியை ஏற்றுமதி செய்த நாடு இன்று இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது ? என்பதற்கான மூல காரணத்தை கண்டறிந்துஇ அதைத் தீர்க்க அரசு முனைய வேண்டும்.
அரிசி உற்பத்திக் குறைவுக்கு வெள்ளம், வரட்சி முதலிய இயற்கைப் பேரிடர்கள் ஒரு காரணமாக இருந்தாலும், திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் போர் காலத்திலே கைவிடப்பட்ட 205 சிறுகுளங்களும் 25 அணைக் கட்டுகளும் மீண்டும் நெற்செய்கைக்கு கொண்டு வரப்படாமல் இருப்பதே முதன்மையான காரணியாகும்.
இவற்றை மீண்டும் நெற் செய்கைக்கு கொண்டு வருவதன் மூலம் ஏறத்தாழ 12,000 ஏக்கர் நிலத்தை நெற் செய்கைக்குள் கொண்டு வர முடியும் இதன் மூலம் 24,000 மெற்றிக் தொன் நெல் உற்பத்தியை அதிகரிக்கவும் இயலும்.
இவ்வாறு நெல் உற்பத்தியை அதிகரிக்கத் தடையாக இருப்பவர்களில் முதன்மையானவர்கள் வனத் துறை அதிகாரிகளும் வனவிலங்குத் துறை அதிகாரிகளும் ஆவர். இவர்கள் வேறு ஒரு நாட்டை கைப்பற்றுவதைப் போல விவசாயிகளது நிலங்களை கைபற்றி விவசாயம் செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர்.
இவர்கள் நாட்டின் நெல் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்னும் அரசின் கொள்கைக்கு எதிராகச் செயற்படுவோர் போல செயற்பட்டு வருகின்றனர். இவ்விடயத்தில் அமைச்சர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டு கொள்கிறேன்.
திருகோணமலை மாவட்டதில் உள்ள வெருகல் பிரதேச செயலாளர் பிரிவின் பரப்பளவு 32,042 ஏக்கர் ஆகும். இதில் வனவிலங்குத் துறை 25,242 ஏக்கர் நிலத்தை தமக்கு உரியது எனவும் வனத் துறை 11,906 ஏக்கர் நிலத்தை தமக்கு உரியது எனவும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.
மொத்தம் 32,042 ஏக்கர் பரப்பளவு நிலத்தை கொண்ட வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் எப்படி 37,148 ஏக்கர் நிலத்தை கைபற்றினார்கள்? இப்படியான திறமை இந்த நாட்டில் உள்ள வனத்துறை மற்றும் வனவிலங்குத் துறை அதிகாரிகளைத் தவிர உலகில் வேறு யாருக்கும் இருக்க முடியாது.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 29,430 ஏக்கர் நிலத்தை வனத்துறை கையகப்படுத்தி வைத்துள்ளது. மேலும் 28,372 ஏக்கர் நிலத்தை கையகப் படுத்த முனைகிறது. வனவிலங்குத் துறை 7,330 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளது.
தொல்பொருள் துறை 1,087 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளது. புத்த பிக்குகள் பூஜா பூமி என்ற பெயரில் 3,820 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளனர். இதன் மூலம் 1985 ஆம் ஆண்டுக்கு முன்பு மக்கள் விவசாயம் செய்த 70,039 ஏக்கர் நிலம் நெல் உற்பத்தி செய்யாமல் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு போகத்தில் 140,000 மெற்றிக் தொன் நெல் உற்பத்தி குறைக்கப்படுறது.
அதேபோல தொல்பொருள் துறையும் மக்கள் விவசாயம் செய்த நிலங்களை தமது எல்லைக் கற்களைப் போட்டுப் பிடித்து வைத்துக்கொண்டு அதனுள் தொல்பொருள் சின்னங்களைக் கண்டுபிடிக்க முடியாமலும் அதேவேளை அதனுள் மக்களை விவசாயம் செய்ய விடாமலும் தடுத்து வருகின்றது . அரசாங்கம் இவ்விடத்தில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.